வியாழன், செப்டம்பர் 15

ஐ.சி.சி. விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றார் சங்கக்கார..

2011ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளில், ரசிகர்களின் மனங்கவர்ந்த வீரருக்கான விருது இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்காராவுக்குக் கிடைத்துள்ளது. அதேவேளை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.

விருதுக்கான வீரர்கள் பட்டியலை மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் கிளைவ் லொயிட் தலைமையிலான குழு இறுதி செய்தது.

இந்தப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவரை 25பேர் கொண்ட குழு தெரிவு செய்துள்ளது. இக்குழுவில் முன்னாள் வீரர் ஊடகவியலாளர்கள், ஐ.சி.சி நடுவர்கள், ஐ.சி.சி கள் நடுவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை உலகின் சிறந்த வீரர்கள் அடங்கிய ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான அணியின் தலைவராக டோனி தேர்வு செய்யப்பட்டார். சச்சினுக்கு இடம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் சிறந்த வீரர்கள் அடங்கிய ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்படும். இதில் உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் இருந்து நான்கு, இறுதி போட்டிக்கு வந்த இலங்கை அணியில் இருந்து மூன்று வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஆரம்ப வீரர்களாக டில்ஷான் (இலங்கை), செவாக் தேர்வு பெற்றுள்ளனர். இடைநிலை வீரர்களாக சங்ககரா (இலங்கை), டிவிலியர்ஸ் (தென்னாபிரிக்கா), வொட்சன் (அவுஸ்திரேலியா) இடம் பெற்றுள்ளனர். 6, 7வது வீரர்களாக யுவராஜ் சிங், டோனி வருகின்றனர். அடுத்த நான்கு இடங்களில் சுழற்பந்து வீச்சாளர் சுவான் (இங்கிலாந்து), வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல் (பாகிஸ்தான்), ஸ்டைன் (தென்னாபிரிக்கா), சகீர் கான் உள்ளனர். 12வது வீரராக மாலிங்க (இலங்கை) தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஐ.சி.சி., சார்பில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருது வென்றவர் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இந்த ஆண்டு உலக கிண்ண தொடரில் இவர் பெரிய அளவில் சாதிக்காததால், இந்த அணியில் தேர்வாகவில்லை.

இதுகுறித்து ஐ.சி.சி., விருது குழுவின் தலைவர் கிளைவ் லாயிட்ஸ் வெளியிட்ட அறிக்கை:

ஒரு நாள் போட்டிக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் நடந்த உலக கிண்ணம் எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்திய அணியினர் கிண்ணம் வென்றதால், ஐ.சி.சி., அணியிலும் ஆதிக்கம் செலுத்தினர். தொடர் நாயகன் யுவராஜ் சிங், இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற தோனி, அதிரடியாக துவக்கம் தந்த செவாக், அதிக விக்கெட் வீழ்த்திய சகீர் கான் ஆகியோருடன், இலங்கையின் மூன்று வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முக்கிய விருதுகள் வென்றவர்கள்: ரசிகர்களின் விருப்ப நாயகன்: சங்கக்கார(இலங்கை)
சிறந்த கிரிக்கெட் உணர்வு: தோனி(இந்தியா)
சிறந்த டெஸ்ட் வீரர்: அலெஸ்டர் குக்(இங்கிலாந்து)
சிறந்த "இருபது-20 வீரர்: டிம் சவுத்தி(நியூசி.,)
சிறந்த வளரும் வீரர்: தேவேந்திர பிஷூ(மேற்கிந்திய தீவு)
சிறந்த நடுவர்: அலீம் தார்(பாக்.,)

கருத்துகள் இல்லை: